பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் தானியங்களில் தேசியக்கொடியை வடிவமைக்கும் ஊர்வல துவக்க விழாவில், காங்கிரஸ் கட்சியினர் காந்திசிலையை மேடையாக்கினர். பொள்ளாச்சியில் பி.ஏ.பி., விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் "கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெறுவதற்காக தானியத்தில் தேசியக்கொடி அமைக்கப்பட்டது. அதற்காக காந்திசிலையில் இருந்து நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தில் பங்கேற்கும் மாணவிகள், சைக்கிள்களுடன் காலை 9.30 மணிக்கு காந்திசிலை அருகில் ஆஜராகி விட்டனர். விவசாயிகளும் அதே நேரத்திற்கு வந்து விட்டனர். பாரத மாத வேடமிட்டு ஊர்வலத்தை துவக்கி வைக்கும் முக்கிய பிரமுகர்கள் வருகைக்காக அனைவரும் 30 நிமிடம் காத்திருந்தனர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாலசுப்பிரமணியம் வந்ததும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அதன்பின், காந்திசிலைக்கு மாலை அணிவிக்க கட்சி நிர்வாகிகளும், அதிகாரிகளும் சென்றனர்.பொள்ளாச்சியில் காந்தி சிலையை சுற்றிலும் 10 பேர் நிற்குமளவுக்கு இரும்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டு காந்திசிலையை சுற்றிலும் கும்பலாக நின்றனர். ஒவ்வொரு நிர்வாகிகளாக பேசி முடித்ததும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாசன சங்க தலைவர்கள், ஊர்க்காவல் படையினர், அதிகாரிகள் அனைவரும் "மைக்' பிடித்து 30 நிமிடம் பேசினர். அப்போது, மாணவிகள் அனைவரும் வெயிலில் காத்திருந்தனர். காங்., கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, உரையை நிறைவு செய்த பிறகு கீழே இறங்கினர்.போக்குவரத்து நிறைந்த இடத்தில், ஊர்வலம் நடக்கும் போது நிகழ்ச்சியை விரைவு படுத்துவதற்கு பதிலாக, காந்திசிலையை மேடையாக்கி விட்டனர். "கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவும், அரசாங்கத்திற்கு விவசாயிகளின் நிலையை தெரிவிப்பதற்காகவும் நடந்த இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடு மக்களை முகம்சுழிக்க வைத்தது.
No comments:
Post a Comment