பொள்ளாச்சி: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து "கின்னஸ்' சாதனை முயற்சியாக மூவாயிரம் கிலோ தானியங்களில் 27 மீட்டர் நீளத்திற்கு தேசியக்கொடியை அமைத்தனர். பொள்ளாச்சியில் பி.ஏ.பி., விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 27 மீட்டர் நீளத்திற்கு தானியங்களில் தேசியக்கொடியை அமைத்து "கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 27 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் மூன்று பாகங்களாக பிரித்து வைக்கப்பட்டிருந்த கட்டங்களில் தானியங்களை நிரப்பினர். விவசாயிகள், மாணவிகள் ஒவ்வொருவரும் வரிசையாக சென்று கட்டங்களில் தானியங்களை தூவினர். முதலில் தேசியக்கொடியின் மையத்தில் இருக்கும் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரத்தை அமைத்தனர். அரிசியில் நீல நிற சாயத்தை கலந்து அசோக சக்கரம் அமைக்கப்பட்டது. கொடியின் மையத்தில் உள்ள வெள்ளை நிறத்திற்கு அரிசியை கொண்டும், மேல் பகுதியில் காவி நிறத்திற்கு ஜிலேபி பருப்பு கொண்டும், கீழ் பகுதியில் பச்சை நிறத்திற்கு பாசிப்பயிறையும் நிரப்பினர். காலை 10.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி மதியம் 3.30 மணிக்கு தேசியக்கொடி முழு உருவம் பெற்றது. அதன்பின், பள்ளி மாணவிகள் தேசியக்கொடியை சுற்றிலும் அணிவகுத்து நின்று, தேசத்தை காப்போம், விவசாயத்தை பாதுகாப்போம் என்று உறுதிமொழியேற்றனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பாசன சங்க திட்டக்குழு தலைவர்கள் பரமசிவம், சின்னசாமி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் ஈஸ்வரமூர்த்தி, ஊர்க்காவல் படைத்தளபதி கண்ணன்,பாசனசபைகளின் கூட்டமைப்பு தலைவர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
No comments:
Post a Comment